“மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா உங்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்“ என்று இன்னர்சிற்றி பிரஸ் ஊடகத்தின் செய்தியாளர் மத்யூ ரசல் லீயிடம் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொகன்ன தெரிவித்துள்ளார்.
எப்போதும் நீங்கள் அவரை போர்க்குற்றவாளி என்று குறிப்பிட்டு குற்றம்சாட்டுவதாலேயே அவர் கோபத்தில் இருப்பதாகவும் பாலித கொகன்ன கூறியுள்ளார்.
நேற்றிரவு நியுயோர்க்கில் உள்ள மிலேனியம் விடுதியில் ஈரான் தேசியநாளை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட இரவு விருந்திலேயே இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளரிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரவு விருந்தில் சவீந்திர சில்வாவும் கலந்து கொண்டிருந்தார்.
அவருடன் இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளர் மத்யூ ரசல் லீ உரையாடிய போது, “நீங்கள் எப்போதும் எனக்கு எதிராகவே எழுதுகிறீர்கள்“ என்று கடிந்து கொண்டுள்ளார்.
பான் கீ மூனின் நிபுணர்குழுவின் அறிக்கையில் தனது டிவிசனுக்கு எதிராகவே குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்றும் தனக்கு எதிராக தனிப்படக் குற்றம்சாட்டப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் அவரே அந்த டிவிசனுக்குத் தலைமை தாங்கியவர் என்று இன்னர்சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.