ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கெதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தில் முக்கியமான பல திருத்தங்களை அமெரிக்கா செய்திருக்கிறது என நம்பகரமான இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா உட்பட்ட இலங்கையின் நேச நாடுகள் வழங்கிய கடும் இராஜதந்திர அழுத்தத்தையடுத்தே, இலங்கைக்கெதிராக ஜெனிவா மாநாட்டில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையில் முக்கியமான பல திருத்தங்களை அமெரிக்கா செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக கொழும்புக்குத் தெரிவிப்பதற்கு முன்பு உத்தேசிக்கப்பட்டிருந்த கால எல்லையை நீடிப்பதற்கும், மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான இலங்கை அரசின் பொறுப்புக்கூறும் கடப்பாட்டை உறுதிசெய்வதற்குமான பொறிமுறையில் மென்போக்கைக் கடைப்பிடிப்பதற்கும் அமெரிக்கா தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் இந்தப் பிரேரணையானது, எதிர்வரும் 15 ஆம் திகதியளவில் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெனிவாவில் உள்ள இராஜதந்திரிகளிடம் முன்னதாக, பிரேரணையின் நகல் ஒன்றை அமெரிக்கா கையளித்திருந்தது. இந்த நிலையில், நேற்று ஜெனிவாவில், இராஜதந்திரிகளிடம் அமெரிக்கா கையளித்த பிரேரணை முன்வரைபில் ஏற்கனவே எடுத்த தீர்மானங்களில் திருத்தங்களைச் செய்திருப்பதை அவதானிக்கமுடிந்தது என உயர்மட்ட இராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையைப் பிற்போடுமாறு இலங்கையின் நேச நாடுகள் விடுத்த வேண்டுகோளிற்கிணங்கவே அமெரிக்கா கால அவகாசங்களின் அடிப்படையில் சில திருத்தங்களைச் செய்ய முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை விடயத்தில் அமெரிக்கா பின்வாங்கிவிட்டது என்று அர்த்தமில்லை என அந்த இராஜதந்திரி தெரிவித்துள்ளார்.
