ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய மதகுருமார்களின் கவுன்சில் ஒன்று பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த கட்டுப்பாடுகளுக்கு எதிரான கேலியான விமர்சனங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானின் முக்கிய மதகுருமார்கள் கவுன்சில் பள்ளிக்கூடங்களிலும், வேலைத்தளங்களிலும் மற்ற எல்லா நாளாந்த நடவடிக்கைகளும் ஆண்களும் பெண்களும் பிரிந்திருக்க வேண்டும், அவர்களைக் ஒன்று சேர விடக் கூடாது என்று அறிவித்தனர்.
இந்த அறிவிப்புக்கு ஜனாதிபதி ஹமீத் கர்சாயும் அங்கீகாரம் அளித்துள்ளார். இதனையடுத்தே சமூக இணையத்தளங்களில் பல்வேறான விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
ஆண்- பெண் வகுப்பு வாதத்துக்கு எதிராக அங்கு புதிய இணையத்தளங்களும் தற்போது தொடங்கப்பட்டு பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. இதே போன்று இன்னும் சிலர் தமது கோபத்தை நையாண்டியாகவும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
காபூலில் வசிக்கும் ஒரு நபர், அரசாங்கத்தின் செலவினம் இன்னும் அதிகரிக்கும், இனி பெண்களுக்கு என்று தனியான நாடாளுமன்றம், தனியான பல்கலைக்கழகங்கள், வங்கிகள், அங்காடிகளை எல்லாம் அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இன்னும் கேலியாக, ஆப்கான் பெண்களே உங்கள் தந்தைமார், கணவன்மார் அல்லது உலமா கவுன்சிலின் அனுமதி இல்லாமல் எவரும் எனக்கு குறிப்புகளை போடவேண்டாம் என்று ஒருவர் டுவிட்டர் தளத்தில் எழுதியுள்ளார்.
இந்நிலையில் காபூலில் இருந்து இளம் மாணவி ஒருவர், நாங்கள் இந்த அறிவிப்புகளைப் பொருட்படுத்தவும் போவதில்லை, கட்டுப்படவும் போவதில்லை என்று தெரிவித்தார்.
இந்த கட்டுப்பாடுகளுக்கு ஆப்கான் அரசு அங்கீகாரம் அளித்துள்ளது, தாலிபன் காலத்தை நோக்கி நாடு செல்வதையே காட்டுவதாக உள்ளது என இளம் ஆப்கானியர்கள் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
தாலிபன்கள் அதிகாரத்தில் இருந்த போது, ஆப்கானிலிருந்து ஈரானுக்கு வந்த பெண் உரிமை ஆர்வலர் சாக்கியா நவா கூறுகையில், அரசின் இந்த நடவடிக்கை ஆப்கானிஸ்தானை மீண்டும் தலிபான்கள் வசம் ஒப்படைப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
