ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள பிரேரணை நியாயமற்றது என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச கடுமையாகச் சாடியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில், இராணுவத்தினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று கூறியுள்ள அவர், இந்த நகர்வு நியாயமற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களான சூசை மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோரின் குடும்பங்கள் இராணுவத்தினரால் நன்றாக கவனிக்கப்படுவதாகவும் மேலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோரையும் நன்றாக பராமரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கைக்கெதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை முறியடிக்க ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும் கோத்தபாய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
மகரகமவில் பௌத்த விகாரை ஒன்றில் இடம்பெற்ற வழிபாட்டை அடுத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
