லண்டனில் சர்வதேச மன்னிப்புச்சபை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக சுதந்திர விசாரணை நடத்த ஐ.நா ஆதரவளிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
அத்துடன், இலங்கையில் 26 ஆண்டுகளாகத் தொடர்ந்த உள்நாட்டுப் போரின் போதும், அதன் பின்னரும் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை நடத்த சர்வதேச சமூகம் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.
ஜெனிவாவில நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் சாம் சார்பி, “இலங்கையில் அரசபடைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது, அரசபடைகள் மத்தியில் தண்டனைகள் பற்றிய அச்சமற்ற உணர்வை உருவாக்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2009 இல் போர் முடிவுக்கு வந்தபின்னர், இலங்கை அரச படைகளால் டசின் கணக்கானவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். "என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை, லண்டனில் சர்வதேச மன்னிப்புச்சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச சுதந்திர விசாரணை நடத்த ஐ.நா ஆதரவளிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
இலங்கை தொடர்பாக 63 பக்கங்களில் அனைத்துலக மன்னிப்புச்சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
‘பூட்டப்பட்டுள்ள இலங்கையின் பாதுகாப்பு கைதிகள்‘ என்ற தலைப்பிலான இந்த அறிக்கையில், இலங்கையில் சட்டத்துக்குப் புறம்மான தடுத்துவைப்புகள், கட்டாயமாக காணாமற்போதல்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாக கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புச்சட்டம், சாட்சியமின்றி கைது செய்யவும், குற்றச்சாட்டுகளின்றி தடுத்து வைக்கவும் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
