புலிகள் ஆயுதத்துடன் செயற்பட்டமை போன்றே சில மதத் தலைவர்கள் இன்று செயற்படுகின்றனர். இவர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரையாற்றியதுடன் நின்று விடாது, ஜெனீவா முதல் வத்திக்கான் வரை செல்ல தயங்கமாட்டேன் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பை அவமானப்படுத்தும் வகையில் நான் நாடாளுமன்றத்தில் ஒருபோதும் உரையாற்றவில்லை. எனது உரை சில தமிழ் ஊடகங்களின் சொந்த நலனுக்காக திரிவுபடுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், முஸ்லிம்களுக்கு காணிகளை விற்க வேண்டாம் என மன்னார் மாவட்ட கிறிஸ்தவ மக்களுக்கு ஆயர் இராயப்பு ஜோசப் உத்தரவிட்டுள்ளார். அதனை மீறியும் காணியை முஸ்லிம்களுக்கு விற்கப்பட்டவர்களுக்கு சாபம் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் குறித்த பிரதேச பெண்மனியொருவர் என்னிடம் அழுது முறையிட்டார். அத்துடன் மன்னார் மாவட்டத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அவர்களின் சொந்த காணிகளிலோ அல்லது அரச காணிகளிலோ மீளக்குடியேற்றும் போது இவர் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்.
முஸ்லிம்கள் வாழ்ந்த இடமான விடத்தல் தீவில் அரசார்பற்ற நிறுவனமொன்றின் நிதியுதவியில் 30 வீடுகளை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டச் சென்றபோது இரண்டு அருட் தந்தைகள் உள்ளிட்ட ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வாறு, இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீளக்குடியேற்ற குறித்த பிரதேச மக்கள் ஆதரவளிக்கின்ற போதும் மதத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்த மக்களின் மனதை மாற்றி எதிர்ப்பு தெரிவிக்க வைக்கின்றனர்.
அத்துடன் மாவட்ட ரீதியான பிரச்சினையினை குறித்த மாவட்டத்திலுள்ள மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடாமல் ஜனாதிபதிக்கு மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் கடிதம் அனுப்பியுள்ளார்.
ஆயுதமேந்திய புலிகள் செயற்பட்டமை போன்றே சில மதத் தலைவர்கள் இன்று செயற்படுகின்றனர். இவர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரையாற்றியதுடன் நின்றுவிடாது, ஜெனீவா முதல் வத்திக்கான் வரை செல்ல தயங்கமாட்டேன் என்றார்.