இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று முதல் சேவைப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தகவலை சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பை கண்டித்தே தமது சங்கம் இந்த தீர்மானத்திற்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தாம் சேவைப் புறக்கணிப்பாக கருதமுடியாது.
31 ரூபாவால் டீசல் விலை அதிகரிக்கப்பட்டமையால் தனியார் துறையினரால் தொடர்ந்து சேவையில் ஈடுபட முடியாத நிலையை எதிர்கொண்டு சேவையில் இருந்து விலகியிருப்பதாக குறிப்பிட்டார்.
இதுகுறித்து இன்றையனதினம் முக்கிய அதிகாரிகளுடன் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இருந்த போதும், குறித்த போராட்டத்தில் தமது தரப்பினர் இணைந்து கொள்ளவில்லை என்று தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் வழங்க திட்டமிடப்பட்டுள்ள மானியத்தின் அடிப்படையில் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள தாம் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அஞ்சன பிரியஞ்சித் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தனியார் பேருந்து போக்குவரத்து துறையை பாதுகாக்கும் நோக்கில் பேருந்து கட்டணங்களை அதிகரிக்காது, மானிய திட்டத்தின் ஊடாக திருப்தியடைவதாக அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தனியார் பேருந்து சேவை துறையினருக்கான முதல்கட்ட மானியத்தொகை இன்றைய தினம்; பேருந்து உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பு செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்று முதல் 15 தினங்களுக்கான மானியத்தொகை இவ்வாறு வழங்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ரோஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், எரிபொருள் மானியம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபைக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை.
எனினும், பொதுமக்களின் தேவைகருதி அரச பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளை வழமையான விதத்தில் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
