கடந்த 10 நாட்களாக பூந்தமல்லி தடுப்புமுகாமில் நீராகாரம் கூட அருந்தாது உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த ஈழத்தமிழரான திரு. ஜெயமோகன் அவர்களின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து தமிழகக் காவல்துறையால் பலவந்தமாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
கடந்த 01.03.2012 காலை 6:00 மணிமுதல் தன்னை விடுவிக்கக் கோரி உண்ணா நிலைப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த ஜெயமோகனின் உடல் நிலை கடந்த இரண்டு நாட்களாக மோசமான நிலையை எட்டியதைத் தொடர்ந்து அவரது போராட்டத்தை கைவிடுமாறு முகாம் அதிகாரிகளால் வற்புறுத்தப்பட்டு வந்தார்.
இருப்பினும் தனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தன்னை விடுவிப்பது தொடர்பாக அவர்கள் எந்தபதிலும் கூறாத நிலையில் ஜெயமோகன் தனது போராட்டத்தை நிறுத்த மறுத்து தொடர்ந்துவந்திருந்தார்.
இதனால் அவரின் உடல் நிலை மிகவும் மோசமடையவே எந்த வாக்குறுதிகளும் வழங்காமல் நேற்று இரவு 8:30 மணிக்கு காவல் துறையினரின் உதவியோடு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெயமோகனை சென்று பார்வையிட எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
இதே வேளை ஜெயமோகன் அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவாக செங்கல்பட்டு சிறப்பு முகாமிலும் அடையாள உண்ணானிலைப்ம் போராட்டம் நடைபெற்றது. நேற்று காலை 9:00 மணிமுதல் மாலை 6:00 மணிவரை நடைபெற்ற இந்த போராட்டத்தில் 25 ஈழத்தமிழர்கள் பங்கெடுத்திருந்தனர்.
இது தொடர்பாக செங்கல்பட்ட்உ முகாம் தலைவரிடம் கேட்டபோது;
இந்த முகாமில் 31 ஈழத்தமிழர்கள் உள்ளனர். அதில் 6 பேர் சுகஜீனம் காரணமாக உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கெடுக்கமுடியவில்லை. மீதி 25 பேரும் ஜெயமோகனுக்கு ஆதரவாக இப் போராட்டத்தை மேற்கோண்டிருந்தனர். காலை 9:00 மணிக்கு ஆரம்பித்த இந்த அடையாள உண்ணாநிலைப் போராட்டம் மாலை 6:00 மணிக்கு தாசில்தார், கியூ பிறாஞ், R.A, முன்னிலையில் மனு கையளிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது.
இப் போராட்டம் ஜெயமோகனுக்கு ஆதரவாக நடாத்தப்பட்ட போதிலும் இது போன்று பல தடவைகள் தமது விடுதலைக்காகவும் உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தபோதிலும் இதுவரை தமக்கு எதுவித பதிலும் கிடைக்கவில்லை. தமக்கான நீதி மறுக்கப்பட்டே உள்ளது என இங்குல்ள அனைவரும் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
தம்மை விடுவிக்க வேண்டும், அல்லது விசாரணையையாவது மேற்கொள்ள வேண்டும். ஒன்றுமில்லாமல் பல ஆண்டுகளாக தாம் அடைபட்டுக்கிடக்கிறோம்.
இவ்வாறான நிலையில் தம்மை பிணையில் தமது உறவினர்களோடாவது தங்கியிருக்க விட்டால் தாம் தமது வழக்கை விரைவாக்கி தமக்கான விடுதலையை பெற்றெடுக்க முடியும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.
இவர்களுக்கு இங்குள்ள தமிழ் அரசியல் கட்சிகளோ, தமிழ் அமைப்புக்களோ முன்வந்து ஆதரவளிக்காததும் வேதனைக்குரிய விடையம், நாம் தமிழர் கட்சியினர் தான் ஓரிரு முறையேனும் தமக்காக குரல் கொடுத்துள்ளனர் எனவும் ஏனைய தமிழக, மற்றும் மேற்குலக நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் அமைப்புக்கள் தமக்கான குரலை கொடுக்காது தமது விடுதலைக்காக முயற்சிகளை மேற்கொள்ளாதது மனவருத்தமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
