அனுராதபுரம், கெப்பிற்றிக்கொல்லாவ கல்விவலயத்தினுள் உள்ள, 5 பாடசாலைகளை முல்லைத்தீவு கல்விவலயத்துடன் இணைத்துக் கொள்வதற்கு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது முல்லைத்தீவு மாவட்டத்தினுள் முன்னெடுக்கப்படும் சிங்கள மயமாக்கலின் ஒரு கட்டம் என சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.மேற்படி மாவட்டத்திலுள்ள, சம்பத்நுவர, அத்தாவட்டுனுவௌ, ஆட்டிகஸ்வெல, சாணக்கபுர, பிரித இப்பன் வெல, ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளையே முல்லைத்தீவு கல்வி வலயத்துடன் இணைத்துக் கொள்வதற்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனை அந்தந்த பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளவுள்ள பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இலங்கை ஆசிரியர் சங்கம் உறுதி செய்திருக்கின்றது.
இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சிங்கள மயமாக்கலின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்தினுள் சிங்கள பிரதேசங்களை உள்ளடக்கி வெலிஓயா என்ற தனியானதொரு பிரதேச செயலகமொன்று ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரங்கள் முளுமையும் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு விட்டனர்.
இதன் தொடர்ச்சியாக அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள 5பாடசாலைகளை முல்லைத்தீவு கல்வி வலயத்துடன் இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
இது முற்றுமுழுதாக சிங்கள மயமாக்கலின் தொடக்கம் என மாவட்ட மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேபோன்று எதிர்காலத்தில் சிங்கள அரச அதிபர் ஒருவரும் நியமிக்கப்படலாம் எனவும் பிரதேச தமிழ்மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.