கடந்த மாதம் 28 ஆம் திகதி லண்டனிலிருந்து ஆரம்பமான தமிழர்களால் மேற்கொள்ளப்படும் இந்த நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் 29 ஆவது நாளண இன்று காலை France நாட்டின் Les Marais எனுமிடத்தில் இருந்து 9:30 ற்கு ஆரம்பமானது. இன்றைய இந்த நடைப்பயணம் இன்று மாலை 5:45 மணியளவில் Switzerland நாட்டின் Saint-Cergue எனுமிடத்தில் நிறைவுசெய்யவுள்ளது.
இவர்களை வரவேற்க சுவிஸ் நாட்டு மக்கள் Saint-Cergue எனுமிடத்தில் ஒன்றுகூடவுள்ளதாகவும், சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் வரமுடிந்தவர்கள் இன்று மாலை 5:30 மணியளவில் வந்து கூடுமாறும் இந்த நடைபயணத்தின் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவ் நடைப்பயணத்தை மேற்கொள்ளும் ஜெயசங்கர், சிவச்சந்திரன், அமர்னாத் ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில், தாம் தற்போது நடந்துவரும் பாதைகள் மலைப்பிரதேசமாக இருப்பதாலும், அவ்விடங்களில் உறைபனி காணப்படுவதாலும் சில சிரமங்கள் எதிர்நோக்குகிறோம், இருப்பினும் தமது நடை பயணம் உறுதியுடன் தொடர்ந்தவண்ணம் உள்ளது என தெரிவித்தனர்.
அத்தோடு நாளை மறுநாள் 27-02-2012 திங்கட்கிழமை ஜெனீவா முன்றலில் நடைபெறவுள்ள "நீதிக்காய் ஒன்றுபடுவோம்" எனும் உரிமைக்குரல் எழுப்பும் போராட்டத்தில் உலகமெல்லாம் பரந்து வாழும் தமிழர்கள் சிரமங்களைப் பாராது அவசியம் வந்து கலந்துகொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இம் முறை நடக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத்தொடரை எமக்கு சாதகமாக்க தவறுவோமேயானால் இனி இதுபோல் ஒரு காலம் வராது எனவும், அதனால் இதுவரைகாலமும் புலம்பெயர் தமிழர்கள் நாம் நடாத்திய அனைத்துப் போராட்டங்களுக்கும் ஈடானதும் எமக்கான நீதியைப் பெற்றெடுக்கும் நிகழ்வாகவும் இது அமைவதால் அன்றைய தினம் அனைத்து தமிழர்களும் ஒன்றுதிரள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
தமிழகத்திலிருந்து நடிகர் சத்தியராஜ் அவர்கள் இந்த நடைபயணத்திற்கு உலகத் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தபோது " தமிழீழம் என்ற ஒற்றை வார்த்தைக்காய் பேதங்களை மறந்து அனைத்து தமிழர்களும் ஒன்றுபடுவோம்" எனத் தெரிவித்திருந்தமை ஐ.நா முன்றலில் மக்கள் அணிதிரளவேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கிறது.







