மனிதவுரிமை விவகாரங்களில் தொடர்ச்சியாக அக்கறையுடன் செயற்பட்டு வருவதால் அது கனடாவில் காத்திரமான பங்கை வகிப்பதோடு மாத்திரமல்லமால் கனடாவின் பாராளுமன்றில் தாக்கம் விளைவிக்கக்கூடியதொரு அமைப்பாக மாறிவிட்டது என கன்சவேட்டிவ் பா.உ. பற்றிக் பிரவுன் தெரிவித்தார்.
தான் கனடிய மனிதவுரிமை மையம் நடத்தும் நிகழ்வுகளில் தொடர்ச்சியாக கலந்து கொள்வதால் கனடிய மனிதவுரிமை மையமே தற்போது கனடாவில் மனிதவுரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்புக்களில் முன்னிலையில் நின்று செயற்படுகிறது என்பதை தன்னால் உறுதிபடக்கூற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதிலும் குறிப்பாக இலங்கை சார்ந்த விவகாரங்களில் கனடிய மனிதவுரிமை மையம் முன்னிற்று மனிதவுரிமை மீறல்களை வெளிக்கொணர்வதையும் அதன் காரணமாக கனடிய அரசின் போக்கில் கடந்த இரண்டு வருடங்களில் கொள்கை மாற்றங்களை இலங்கை விவகாரத்தில் இது ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்ததோடு,
கனடிய வெளிவிவகார அமைச்சரும் கனடியப் பிரதமரும் காத்திரமாக இந்த விவகாரத்தில் நடந்து கொண்டதை நினைவு கூர்ந்த பற்றிக் பிரவுன், கனடிய மனிதவுரிமை மையம் கனடாவில் தாக்கம் விளைவித்ததைப் போல சர்வதேச அரங்கிலும் இந்த விவகாரத்தில் தாக்கம் விளைவிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்களை இந்த விவகாரத்தில் கற்பித்தலுக்குள்ளாக்கிய கனடிய மனிதவுரிமை மையத்தினை நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
கனடிய மனிதவுரிமை மையமானது தனது 2012ம் ஆண்டிற்கான திட்டத்திற்கமைய சீன மற்றும் இந்திய சார் அரச அமைப்புக்கள் மற்றும் அரசுப் பிரதிநிதிகளுடன் சிறீலங்கா சார் மனிதவுரிமை விவகாரங்களை எடுத்துச் செல்லவுள்ளது.
கனடிய தேசிய ஊடக மற்றும் கனடிய அரசியற் பிரமுகர்களை இயக்குனர் சபை அங்கத்தவர்களாகக் கொண்ட கனடிய மனிதவுரிமை மையம் ஈழத்தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட மனிதவுரிமை மீறல்களை வெளிக்கொணர உழைப்பதுடன், தமிழர்களிற்கான தீர்வுக்காக உழைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சு முயற்சிகளிற்கான முழு ஆதரவை வழங்கிவரும் ஒரு அமைப்பாகும்.
