சிறிலங்கா அரசின் கொடுமையான குற்றங்களை அம்பலப்படுத்தியதுடன், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை இனங்காட்டிய தனிநபர்களையும், அமைப்புகளையும் நினைவுபடுத்தி நோபல் பரிசு வழங்கும் குழுவிற்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
மனிதாபிமானத்துடன் செயற்பட்ட இவர்கள் சிங்கள இனவாதத்தினால் ஏற்பட்ட கொடுந்துயரத்திலிருந்து தமிழ் மக்களை ஆறுதல்படுத்தியவர்கள். இந்த இனப்படுகொலைகளை செய்தவர்களையும், இவற்றால் பாதிக்கப்பட்டவர்களையும் வெளியுலகிற்கு இனங்காட்டியவர்களும் இவர்களே. இப்பரிசினை பெற இவர்கள் தகுதியுடையவர்கள் என நோபல் பரிசு வழங்கும் குழுவிற்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
மேலும், ஒவ்வொரு வருடமும் இந்தப் பரிசினை வழங்கும் போது அதை மக்கள் மதிப்புணர்ச்சியுடன் வரவேற்பார்கள். இதன் மூலம் சமாதானத்தைக் கொண்டு வருபவர்களையும், உலகில் நடக்கும் கொடிய வன்முறைகளை புரிபவர்களையும் உலக மக்கள் இனங்கண்டு கொள்வர். இதனால் எதிர்காலத்தில் உலகில் நடைபெறும் கொடூர வன்முறைகள், இனக்குற்றங்கள் தடுக்கப்படலாம்.
இவர்களுக்கு இப்பரிசை வழங்குவதால், இலங்கைத் தமிழர்களை ஆறுதல்படுத்துவதுடன், அவர்களை துயரிலிருந்து மீண்டெழ வைக்க முடியும். இப்பரிசை வழங்கத் தகுதியுடையவர்களையும், அவர்கள் செய்த சேவைகளையும் சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கும் குழுவிற்கு வழங்க தாம் தயாராக இருப்பதாகவும், இதற்குரிய பதிலை இக்குழுவிடமிருந்து தாம் எதிர்பார்ப்பதாகவும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.