யாழ்.நல்லூர் பகுதியில் அமைந்துள்ள கிட்டுப் பூங்கா வளாகத்தை படையினருக்கு தாரை வார்த்துக் கொடுப்பதற்கு சில அரச அதிகாரிகள் முனைப்புக் காட்டிவருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், இதை உறுதிப்படுத்தும் வகையில் குறித்த பகுதியில் படையினரின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
யாழ் பருத்தித்துறை வீதியில் சுமார் 2ஏக்கர் நிலப்பகுதியில், முத்திரைச்சந்தி சந்தைக்கு அருகில் சிறுவர் பூங்காவொன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கிட்டு இந்த இடத்தில் ஒரு பூங்காவை அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டியிருந்தார்,
இந்நிலையில் அவருடைய வீரச்சாவின் பின்னர் அந்த இடத்தில் புலிகளால் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்ட பூங்காவிற்கு கிட்டுப் பூங்கா என பெயரிடப்பட்டது. எனினும் 1995ம் ஆண்டு யாழ்ப்பாணம் இழக்கப்பட்டபோது. இந்த பூங்கா சிதைக்கப்பட்டது.
அன்றிலிருந்து இன்றுவரை அந்த இடம் பயன்படுத்தப்படாத நிலையிலேயே இருந்து வருகின்றது. எனவே அந்த இடத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர படையினர் முயற்றி எடுத்துள்ளனர், இதன் குறித்த பகுதி அரச காணி என அவர்கள் வாதிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் அந்தப் பகுதியில் ஒரு சிறு பகுதி மட்டுமே அரசாங்கத்திற்குச் சொந்தமானதாகும், ஏனைய பகுதி யாழ்.மாநகர சபைக்குச் சொந்தமானதாகும், இந்நிலையில் குறித் நிலம் தொடர்பான அறிவு எதுவுமற்ற நிலையில் அந்தப் பகுதியை படையினருக்கு வழங்க மாநகர சபையினரே நடவடிக்கை எடுத்துள்ளனராம்,
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில், இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் சீ,வீ.கே.சிவஞானம் ஜனாதிபதிக்கு கடிதமெழுதியிருக்கின்றார், எனினும் அந்தப் பகுதி படையிருக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிடவில்லை.
இதேவேளை பிந்திக் கிடைத்த தகவல்களின் படி அந்தப்பகுதி படையினருக்கே வழங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.