.

Home » » காதல் நினைவுகள் ...!

காதல் நினைவுகள் ...!


காதல் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை உச்சரித்தாலே காதல் வயப்பட்டவர்களுக்கு ஒரு வித வலிமை ஏறும். ஏனெனில் காதலானது காதலர்களை வலிமையுள்ளவர்களாக மாற்றுகிறது. அதனால்தான் “கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மா மலையும் ஓர் கடுகாம்” என்று கூறியுள்ளார் பாரதிதாசன்.

காதலானது மனிதர்களிடம் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என பலர் ஆய்வு செய்திருக்கிறார்கள்.அவர்களின் ஆய்வு முடிவுகளும் இந்த கருத்தை உறுதிப்படுத்தியுள்ளன.

மனசோடு இணைய வேண்டும்

கண்டவுடன் காதல் வருவது இயற்கைதான். நமக்கான துணையை நாம் சந்திக்கப் போகிறோம் என்பதை உணர்த்தும் வகையில் அதற்கேற்ப பல சம்பவங்கள் நடைபெறும். எனினும் நாம் தேர்ந்தெடுக்கும் துணை நமக்கானவராக இருக்கவேண்டும். ஏனெனில் வாழ்க்கையின் வெற்றியானது நமக்கு அமையும் வாழ்க்கை துணையின் கைகளிலே அமைந்துள்ளது. எனவே நமக்கானவரை தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கே உண்டு. அத்தேர்வில் உங்களது பிரகாசமான எதிர்காலமும் அமைந்துள்ளது என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். எனவேதான் நாம் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கைத் துணை நமது ரசனைக்கு ஏற்றவராக இருப்பது நல்லது.

காதலித்து திருமணம் செய்து குறைந்தபட்சம் 7 வருடகாலம் தம்பதிகளாக இருந்த 169 ஜோடிகளிடம் இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மிகவும் வலுவான நெருக்கத்தை – உறவைக் கொண்டுள்ள தம்பதிகளில் இருவரும் ஒரே மாதிரியான புத்திக்கூர்மையானவர்களாக, நெகிழ்வுத்தன்மையுடையவர்களாக, சமூக பொறுப்புனர்வுடையவர்களாக, கல்வியறிவு உடையவர்களாக இருந்துள்ளமை தெரியவந்தது.

உதிரத்தில் கலந்த உயிர்

வாழ்க்கைத் துணையானவர் நம்மில் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்திருப்பவர் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது இந்த ஆய்வு முடிவு. தனிமையாக அல்லது பிறருடன் இருப்பதைவிட தமது வாழ்க்கைத் துணையுடன் இருக்கம்போது இரத்த அழுத்தம் குறைவாக இருப்பது ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டது.

எனவே தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசாவிட்டால்கூட தொலைக்காட்சி பார்த்தல், வாசித்தல், இணையத்தளங்களை பார்வையிடுதல் அல்லது வேறு பணிகளில் ஈடுபடுவதை ஒரே அறையில் இருந்து செய்வது நன்மையளிக்கும் என்று கூறியுள்ளனர் ஆய்வாளர்கள்.

கைத்தலம் பற்றிய நினைவுகள்

நமக்கு மட்டுமே உரிமையானவர் என்பதை உணர்த்தும் வகையில் காதலர்கள் கைகோர்த்தவாறு செல்வது வழக்கம். அதெல்லாம் திருமணம் வரைதன் அதன்பின் அதை பெரும்பாலோனோர் தொடர்வது இல்லை. ஆனால் திருமணத்தின் பின்னரும் இதைத் தொடர்வது நல்லது என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஏனெனில் வாழ்க்கைத் துணையுடன் கைகோர்த்து கொள்வதன் மூலம் மன அழுத்தங்கள் குறைகின்றன எனக் கூறப்படுகிறது.

இது குறித்து தம்பதியரிடம் தனித்தனியாக அவர்களின் மூளையை ஸ்கேன் செய்யப்பட்டது. அப்போது அவர்கள் மின்சார அதிர்ச்சியை எதிர்கொள்ளப்போவதாக கூறப்பட்டது. இந்த ஆய்வின்போது தமது வாழ்க்கைத் துணையின் கரம் பற்றியிருந்த பெண்களின் மூளையில் அச்சத்திற்கான பிரதிபலிப்பு குறைவாகவே இருந்ததாம். அதாவது தமது கணவருடன் கைகோர்த்திருந்த பெண்கள் மின்சார அதிர்ச்சி குறித்து அவர்கள் குறைவாகவே அச்சமடைந்தனர்.

மன அழுத்தம் குறைக்கும்

தம்பதிகள் தினமும் ஒருமுறையாவது முத்தமிட்டுக்கொள்வது நல்லது என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த நெருக்கமானது இருவரிடையேயான பிணைப்பை அதிகரிக்கும். இதனால் ஆக்ஸிடோஸின் எனும் ஹார்மோன் அதிகமாக சுரப்பதாகவும் மன அழுத்தத்துடன் தொடர்புடைய கார்டிசோல் ஹார்மன் குறைவாக சுரப்பதும் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

முத்தமிடும்போது மூளையின் செயற்பாடுகளில் தாக்கம் செலுத்தும் நரம்புகளில் 50 சதவீதமானவை தூண்டப்படுகின்றன. முத்தத்தின் போது, உங்கள் துணையின் தோலின் கதகதப்பு உணர்வு, மென்மையான உதடுகளின் சுவை உணர்வு போன்றவை மூளைக்குள் சென்று நரம்புகளைத் தூண்டி புதிய பிணைப்பை ஏற்படுத்துகிறது.

புகைப்படம் சொல்லும் பாடம்

வெளியூரோ அல்லது துணையினை விட்டு சில நாட்கள் பிரிய நேர்ந்தாலோ அவர்களின் புகைப்படத்தை எடுத்துச் செல்வது நல்லது. ஏனெனில் அது அந்த புகைப்படமே அவர்களுக்கு தேவையான சக்தியை அளிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

அன்புக்குரியவர்களின் புகைப்படங்களைப் பார்க்கும்போது, மூளையில் மகிழ்ச்சிக்குரிய பாகம் தூண்டப்படுவதாக மூளை ஸ்கேன் செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக உறவு நிலையின் ஆரம்ப கட்டத்தில் இது அதிகமாகவுள்ளது.

எனவே காதல் என்ற உணர்வு நம் உயிர் வரை ஊடுருவி மனிதர்களை வலிமை மிக்கவர்களாக மாற்றுகிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்பதை இந்த ஆய்வு முடிவுகள் உணர்த்துகின்றன.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved