தமிழீழக் கோரிக்கையை தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சி ஆதரிக்கவில்லையெனவும் இருப்பினும், ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்பட வேண்டுமென்று தமது கட்சி ஆணித்தரமாக நம்புவதாக தமிழ்நாட்டு காங்கிரஸ் குழுவின் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
பிறிதொரு நாட்டின் உள்ளக விவகாரங்களில் எங்களால் தலையிட முடியாது. ஆனால் கடந்த 20 வருடங்களாக இலங்கை இராணுவத்தினராலும் தமிழீழ விடுதலைப் புலிகளினாலும் துன்பத்தை அனுபவித்த இலங்கைத் தமிழர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு இந்தியா கடமைப்பட்டுள்ளது.
அவர்கள் தங்களது வீடுகளுக்கு செல்வதற்கான முன்னுரிமையளித்து பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் எம்.கருணாநிதி உட்பட பல தமிழ்த் தலைவர்களினால் ஈழம் கோரிக்கை மீளவும் முன்வைக்கப்படுவது குறித்து பி.எஸ்.ஞானதேசிகன் கூறுகையில்,
தமிழ்நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களின் ஆக்ரோஷமான நிலைப்பாடானது இலங்கைத் தமிழர்கள் மீதான எந்தவித நலன்களின் அடிப்படையானதாக இருக்க முடியாது. இலங்கை அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை இது உருவாக்குமெனவும் அவர் தெரிவித்தார்.