இலங்கை மக்கள் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சித் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது கணவரான விஜய குமாரணதுங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை மக்கள் கட்சியின் தலைவராக சந்திரிக்கா பணியாற்றியிருந்தார்.
இந்த கட்சி தற்போதைய ஆளும் கட்சியின் பங்காளி கட்சி என்ற போதிலும் தற்போதைய ஆட்சியாளர்களினால், மக்கள் கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காத நிலையில், கட்சியின் தலைவர்கள் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இலங்கை மக்கள் கட்சியின் தலைவர்கள், அந்த கட்சியின் முன்னாள் உறுப்பினரான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மகளான ஷிருணிகாவை கட்சியில் இணைத்து கொண்டதுடன் அவருக்கு உப செயலாளர் பதவியை வழங்கினர்.
இவ்வாறான சூழ்நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் அவர் அதற்கு இதுவரை எந்த பதிலையும் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.