ஜெனிவாவில் நாளை தொடங்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன நேற்று வெளியிட்ட அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த முடிவை எடுக்காது போயிருந்தால், அவர்களும் கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட அழிவுகளுக்குப் பதில் கூறும் நிலை ஏற்பட்டிருக்கும்.
விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த கூட்டமைப்பு, புலிகள் என்ன செய்தனர் என்ற கேள்விக்குப் பதில் கூறியிருக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் பாதுகாத்ததால் சிறிலங்கா அரசாங்கம் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை.
சிறிலங்கா அரசாங்கம் மனிதஉரிமைகளை மீறவில்லை. விடுதலைப் புலிகளால் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருந்த தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்துள்ளது.
அவசரகாலச்சட்டம் இல்லை. உயர்பாதுகாப்பு வலயங்கள் இல்லை. ஜனநாயகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவர்களால் எப்படி அரசாங்கம் உறுதிமொழிகளை மீறியதாக குற்றம்சாட்ட முடியும்?
தனிஈழம் பற்றிய கனவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் இருக்குமேயானால், அவர்கள் யதார்த்த நிலையை விளங்கிக் கொள்ளவில்லை என்றே அர்த்தம்.
ஒரு காலத்தில் வடக்கு, கிழக்கிற்கு செல்ல முடியாத நிலையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.
தமிழ் மக்களை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளிவிடக் கூடாது என்று நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எச்சரிக்க வேண்டியுள்ளது.
அதே தவறை மீண்டும் செய்து விடக் கூடாது. அது நாட்டைப் பாரிய அழிவுக்குள் தள்ளி விடும் ஆபத்து உள்ளது“ என்றும் பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.