யாழ். பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளை இராணுவ கட்டளை தளபதி ஹத்துருசிங்கவுடன் தனியான சந்திப்பொன்றை நடாத்த பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த போதிலும் மாணவர் பிரதிநிதிகள் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்.பல்கலைக்கழக மாணவர் தர்சானந்த் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, யாழ். பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர்களும் தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை காலவரையாற்ற வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், நேற்று பல்கலைக்கழக நிர்வாகம், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளை அழைத்து, யாழ்.மாவட்ட இராணுவ தளபதி ஹத்துருசிங்கவுடன் தனியாக ஒரு சந்திப்பில் ஈடுபடுமாறு கோரிக்கை விடுத்தது.
எனினும், மாணாவர் பிரதிநிதிகள் இதனை மறுப்புத் தெரிவித்துள்ளனர். மேலும், எந்த விதமான சந்திப்புக்கள் ஏற்பாடு செய்வது என்றாலும் பகிரங்கமான இடமொன்றில் ஊடகவியலாளர்கள் மத்தியில் ஏற்பாடு செய்துதரப்படும் கூட்டத்தில் சந்திப்புக்கு தயாராக இருப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
தனிமையில் சந்திப்பதால் மாணவர்களின் பாதுகாப்பை மேலும் பாதிப்பதுடன் மாணவர்களின் முகங்களை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையாக இருக்கலாம் எனவும் மாணவர்கள் தரப்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.