மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் ஆனந்தா நகர் அரசு தொடக்கப் பள்ளியில் நீல் ஹால்டர்(வயது 7) 2ம் வகுப்பு படித்து வருகின்றான்.
இந்நிலையில் கடந்த இருதினங்களுக்கு முன்பு, தனது ஆசிரியர் உபேந்திரா ராய் கொடுத்த வீட்டுப் பாடத்தை செய்யாமல் பள்ளிக்கு சென்றான்.
இதனால் ஆத்திரமடைந்த உபேந்திரா ராய், மாணவனின் கை, முதுகில் சிகரெட்டால் சூடு வைத்ததாக கூறப்படுகிறது.
மாலையில் வீடு திரும்பிய நீல், தனது குடும்பத்தினரிடம் இந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளான். இதுகுறித்து சிறுவனின் உறவினர் மாணிக் நேற்று பொலிஸில் புகார் கொடுத்ததன்பேரில் விசாரணை நடத்துவதற்காக பொலிஸார் பள்ளிக்கு சென்றனர்.
ஆனால் ஆசிரியர் தலைமறைவாகி விட்டது தெரிந்ததையடுத்து, அவருக்கு பொலிஸார் வலை வீசியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மாணிக்கும் உபேந்திராவும் பக்கத்து வீட்டுக்காரர்கள். இருவருக்கும் நிலம் தொடர்பாக ஏற்கனவே பிரச்சினை உள்ளது.
இந்த கோபத்தில் மாணவனுக்கு உபேந்திரா சூடு வைத்திருக்கலாம். பள்ளி வளாகத்தில் ஆசிரியர் சிகரெட் புகைத்ததே தவறு. அதிலும் மாணவனுக்கு சூடு வைத்தது கொடூரமானது என்றனர்.