அசாமில் இளம் பெண்ணொருவரை சமூக விரோதிகள் மானபங்கம் செய்த வீடியோவை தடயவியல் சோதனைக்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் அனுப்பவுள்ளனர்.
அசாமின் கவுகாத்தியில் கடந்த வாரம் இளம்பெண்ணொருவரை 20 பேர் கொண்ட கும்பல் மானபங்கம் செய்தனர்.
இந்த சம்பவத்தை நியூஸ் லைவ் என்ற தனியார் டி.வி. சேனல் படம்பிடித்து ஒளிபரப்பி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மானபங்கம் செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் இளம் பெண்ணை மானபங்கம் செய்ய தூண்டியதே டிவி சேனல் நிருபர் நியோக்தான் என்றும், அவரது உரையாடல் வீடியோவில் பதிவாகியுள்ளது எனவும் தகவல் ஆர்வலர் அகில் கோகாய் என்பவர் குற்றம் சாட்டினர். இதையடுத்து, அந்த நிருபர் தனது வேலையை ராஜினாமா செய்து விசாரணையை சந்திக்கப் போவதாக கூறினார்.
இச்சம்பவத்தை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவினர் மானபங்க காட்சியின் வீடியோவை தடயவியல் சோதனைக்கு அனுப்ப போவதாக கூறியுள்ளனர். இதன் மூலம் நிருபர் மீதான குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்பது தெரியவரும்.
இந்நிலையில், பெண் மானபங்க காட்சியை டி.வி. சேனல் ஒளிபரப்பி இருக்க கூடாது என அசாம் முதல்வர் தருண் கோகாய் கருத்து தெரிவித்திருந்தார்.
இதையடுத்து டி.வி. சேனலின் ஆசிரியர் அடானு புயன் என்பவரும் தனது வேலையை ராஜினாமா செய்தார். முதல்வர் மற்றும் உயர்மட்ட வற்புறுத்தல் காரணமாக வேலையை ராஜினாமா செய்வதாக அடானு புயன் கூறியிருந்தார்.
இதற்கு முதல்வர் தருண் கோகாய் மறுப்பு தெரிவித்துள்ளார். செய்தி சேனல் ஆசிரியர் ராஜினாமா செய்ய சொல்லி டி.வி. நிர்வாகத்தை நான் நிர்பந்தம் செய்யவில்லை என்றும் இது தொடர்பாக நியூஸ் லைவ் நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும் என கூறினார்.
இதையடுத்து டி.வி. நிர்வகாத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், உரிமையாளருமான காசிக் பெஸ்போரா அளித்துள்ள பேட்டியில், நிருபர் நியோக், ஆசிரியர் அடானு புயன் ராஜினாமா தொடர்பாக முதல்வரிடமிருந்தோ அல்லது அரசு தரப்பிலோ இருந்தோ எங்களுக்கு எந்த வற்புறுத்தலும் வரவில்லை.
சுதந்திரமாக செயல்படும் எங்கள் நிறுவனத்தில் வெளிநபர் ஆதிக்கம் செலுத்தப்படுவதாக கூறப்படுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என கூறியுள்ளார்.